புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் ஒருவர், நூதன முறையில் போர்வையில் மறைத்து எல்.இ.டி டிவியை திருடிச்செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், நேற்று காரைக்காலை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று இரவு அறையை காலி செய்துவிட்டு சென்றபோது, விடுதி ஊழியர்கள் அறையை சோதனை செய்தபோது, அங்கிருந்த எல்.இ.டி டிவி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள், அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, தினேஷ் டி.வியை போர்வைக்குள் மறைத்து வைத்து திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக விடுதி ஊழியர்கள் உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டிவியை திருடிச்சென்ற தினேஷை தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.