புதுச்சேரி கடற்கரையில் விளையாடிகொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை ஒன்றரை லட்சத்திற்கு கடத்தி விற்கப்பட்ட கொடூரம்

புதுச்சேரியில் கடற்கரையில் விளையாடிகொண்டிருந்த 4 வயது குழந்தை ஒன்றரை லட்சம் பணத்திற்காக கடத்தி விற்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி – விஜயலட்சுமி தம்பதியினர் புதுச்சேரி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது நான்கு வயது பெண் குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, இரண்டு வாலிபர்கள் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அந்த பெண்
காரைக்காலை சேர்ந்த ஜகபர் நாட்சியார் என்பதும், புதுச்சேரியை கணுவாப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி, பூமியான் பேட்டையை சேர்ந்த ஆகாஷ் இருவரிடம் ரூ.1.5 லட்சம் பேசி, ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து குழந்தையை அவர்கள் மூலம் கடத்தி காரைக்காலுக்கு கொண்டுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரையும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.