புதுச்சேரியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி எம் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58). மீனவரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை கடத்தி அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்போது சிறுமியின் பெற்றோர் கிருமாபாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் முனியப்பனை போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த நான்கு வருடங்களாக புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம்சாட்டப்பட்ட முனியப்பனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.