புதுச்சேரியில் பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறை… துணை ஜனாதிபதி விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் துணை ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்காமல், காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்டதை கண்டித்து துணை ஜனாதிபதி விழாவை ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களும் புறக்கணித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று மாலை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விக்‌ஷித் பாரத்-2047 என்ற மத்திய அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இவ்விழாவில் பங்கேற்க பத்திரிக்கையாளர்களுக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் உளவுத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் இன்று மதியம் 2.30 பல்கலைக்கழக விழாவுக்கு தனி வாகனம் மூலம் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில், பத்திரிக்கையாளர்கள் மதியம் 2.30 மணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு 2 மணி நேரம் பத்திரிக்கையாளர்கள் காக்க வைக்கப்பட்டு 4.30 மணிக்கு வாகனம் மூலம் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து விழா நடைபெற்ற அரங்க கட்டிடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் சென்றனர். அங்கு விழா நடைபெற்ற அரங்கிற்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த பத்திரிக்கையாளர்கள் உடனே பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காவலர்களிடம் ஏன்? அழைப்பு விடுத்துவிட்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். உடனே மக்கள் தொடர்பு அதிகாரி வாட்ஸ்அப் மூலம் விடுத்த அழைப்பை நீக்கினார்.

இதற்கிடையே மக்கள் தொடர்பு அதிகாரியிடம் முறையிட்ட நிகழ்வை சில பத்திரிக்கையாளர்கள் தங்களது செல்போனில் வீடீயோ எடுத்தனர். உடனே அங்கு வந்த சீனியர் எஸ்பி ஸ்வாதி சிங் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பிடுங்கி வீடியோக்களை டெலிட் செய்தார். மேலும், அவர் இங்கு யாரும் நிற்க கூடாது என கடுமையான வார்த்தைகளால் கூறி பத்திரிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு எச்சரித்தார்.

இப்பிரச்னை குறித்து விழாவுக்கு வருகை தர இருந்த ஆளுநர் தமிழிசையை சந்தித்து முறையிட பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்து காத்திருந்தனர். அப்போது, சீனியர் எஸ்பி சுவாதி சிங் ஐ.ஆர்.பி.என் போலீசாரை வைத்து பத்திரிக்கையாளர்கள் விழா நடைபெறும் பகுதியில் வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு ஐஆர்பிஎன் போலீசார் குவிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினர்.

அப்போது, அங்கு வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பத்திரிக்கையாளர்களை விழாவுக்கு வருமாறும், விழா முடிந்த பிறகு பிரச்னை குறித்து பேசி கொள்ளலாம் என்று கூறி சமாதானம் செய்தார். அதை பத்திரிக்கையாளர்கள் ஏற்காமல் விழாவை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.