புதுச்சேரியில் அதிகாலை முதல் சாரல் மழை… கடல் சீற்றம்… சுற்றுலா பயணிகளை வெளியேற்றிய போலீசார்.!!

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியால்பேட்டை, புதிய பேருந்து நிலையம் மற்றும் கிராமப் பகுதிகளால வில்லியனூர், பாகூர், திருக்கனூர், கன்னியகோவில், காலாப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், கோடை விடுமுறையில் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

இதனிடையே லேசான கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி கடற்கரையில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்து, கடற்கரையில் விளையாடிகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றினர்.