சேரும் – சகதியுமான புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி

புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தற்காலிக பேருந்து நிலையம் சேரும் சகதியுமாக உள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனிடையை கனமழை காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் அமைத்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளது.

இதனால் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பொது மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி மணல் கொட்டி சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.