மகாத்மா காந்தி நினைவுநாள்: புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாம், சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு, நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.