புதுச்சேரியில் மூவர் படுகொலை சம்பவத்தால் மக்கள் பீதி: சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம்

இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலம் ஆன்மீக பூமியாகவும், எப்போதும் அமைதியையும், காண்போரை வசீகரிக்கும் அழகையும் ஒருங்கே பெற்ற சுற்றுலா நகரமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா வளர்ச்சி அதிகரித்து மாநிலத்தின் வளர்ச்சியில் சுற்றுலா பெரும் பங்கு வகித்து வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சுதந்திரமாக அச்சமின்றி புதுச்சேரியின் அனைத்து பகுதிக்கும் பயணிக்க முடிந்தது.

இப்படி பாதுகாப்பாக ஆன்மீக சுற்றுலாவை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் இன்று மதுச்சேரியாக உருவெடுத்து இளைஞர்கள் 24 மணி நேரமும் போதையில் மூழ்கி கிடக்கின்றன. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு இளம் சிறார்கள் அடிமையாகி அவர்கள் ஒரு கட்டத்தில் ரவுடிகளாக உருமாறி விலைமதிப்பற்ற மனித உயிர்களை துச்சமென நினைத்து சர்வ சாதாரணமாக வெடிகுண்டு வீசியும், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று புதுச்சேரி மண்ணில் மூன்று படுகொலைகளின் ரத்தம் தெளிக்கப்பட்டு அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது. வளர்ந்தோங்கி வர வேண்டிய புதுச்சேரி வன்முறைக்களமாக மாறி வருவதன் காரணம் என்ன?.

புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருப்பதும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் உரிய நேரத்தில் நிரப்பாத காரணத்தாலும் படித்த இளைஞர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
கொலைக்கான காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் ஓர் ஆட்சி இங்கு நடைபெறுகிறதா என்பதை இச்சம்பவம் கேள்விக்குறி அல்லவா ஆக்கியுள்ளது. புதுச்சேரியில் சட்டம்–ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. ரெஸ்டோ பார்களின் பெருக்கமும், கஞ்சா விற்பனையும், காவல்துறையின் செயலின்மையும் அதிகரித்து வரும் அபாயத்தை இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி எச்சரித்தும் வந்துள்ளோம். ஆனால் அரசோ எதற்கும் அசையாமல் சொரணை அற்றும் அலட்சியம் காட்டியதால் வரும் விலைவுகளே இந்த சம்பவங்கள்.
வேலை இல்லாத நிலையில் வெறும் சரக்குக்காக கூலிக்கு கத்தியை தூக்கும் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் ரவுடிக் குழுக்கள் பெருகி வருகிறார்கள். அண்டை மாநில ரவுடிகளுடன் கூட்டு சேர்வதும், அண்டை மாநிலத்தில் குற்றம் இழைத்து புதுச்சேரியில் தஞ்சம் அடைவதும் அதை காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பதும் சகஜமாகிவிட்டது. சிறப்பான புதுச்சேரி காவல்துறை இன்று சீரழிந்து போயுள்ளது. சென்ற சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக களமிறங்கி குற்றவாளிகளை களை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

இதனால் சில மாதங்கள் ரவுடிகளின் அட்டகாசம் இல்லாமல் இருந்தது. தஞ்சம் புகுந்த வெளிமாநில ரவுடிகள் புதுச்சேரியை காலிசெய்துவிட்டு ஓடினர். இந்நிலையில் வழக்கம் போல் அந்த அதிகாரியை மேலிடம் அமைதிப்படுத்தியது. இதனால் மீண்டும் ரவுடிகள் தலைதூக்க தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த சட்டம்–ஒழுங்கும் ஒரே ஒரு காண்காணிப்பாளரால் முறையாக நிர்வகிக்கப்படும் போது புதுச்சேரியில் 10 க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்து சட்டம்–ஒழுங்கு சீர்கெட காரணம் என்ன?. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு தகுந்த நியாயம் கிடைப்பதில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்தும், ரவுடிகள் தலையீடும் தான் நாளுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் காவல் நிலையங்கள் இன்று கட்டப்பஞ்சாயத்து கூடமாக மாறி வருகிறது. காவல் துறையில் செயலாற்றும் சிறப்பு பலனாய்வு பிரிவு என்ற ஒன்று இங்கு செயல்படுகிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற பின்னணிகளை ஆய்வு செய்து, அதன் அறிக்கைகள் வழி குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்படும் முறையை இத்துறை கொண்டுள்ளதா. இப்படிப்பட்ட கொடூர குற்றங்கள் நடக்கும் நிலையில் தான் இவைகள் பற்றி விசாரிக்கத் தோன்றுகிறது.
மக்கள் அச்சப்பட கூடிய இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறியும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய காவல் துறை அமைச்சர் இதுவரை வாய் திறக்காமல் எங்கு போனார் என்று தெரியவில்லை. எந்த நிர்வாக ஒழுங்குமுறைக்கும் அவர் பொறுப்பேற்பதில்லை. ஓராண்டு காலமாக பற்றி எரியும் மணிப்பூரை எட்டிக்கூட பார்க்காத பிரதமரை கொண்ட கட்சியைச் சேர்ந்தவர் அல்லவா அவர். அவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
ஆகவே, ஆட்சிக்கு தலைமை தாங்கும் முதல்வர் இதில் கவனம் செலுத்தி சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். சட்டம்–ஒழுங்கை காப்பதில் காவல்துறையினர் பாரபட்சமின்றி நடக்க வழி ஏற்படுத்த வேண்டும். ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு பிரிவிற்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். தேவையில்லாமல் புதுச்சேரி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற பரிந்துரைக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழும் அமைதியான புதுச்சேரி மீண்டும் உருவாக்க அரசு முன்வர வேண்டும். இல்லையேல் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் தக்க நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை ஆளும் அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.