புதுச்சேரியில் தவளக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் கண்ணாடி, மேஜை உள்ளிட்ட பொருட்களை உடைத்து பள்ளியை சூறையாடிய நிலையில், ஆசிரியர் மற்றும் பள்ளியின் நிறுவனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக புதுச்சேரி – கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்றும், மேலும் அந்த பள்ளியில் நாளை (15.02.2025) நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். இதனிடையே தலைமறைவாக உள்ள பள்ளியின் நிறுவனர் ராமுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் பாஜக பிரமுகர் ராமு என்பவருக்கு சொந்தமாக தனியார் பள்ளி(செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும், நோனாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன், அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று இதுகுறித்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. மேலும் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மணிகண்டனுக்கு ஆதரவாக செயல்பட்டு இவ்விவாகாரத்தை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகரா் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தியுள்ளதாத கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடி ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளியின் நிறுவனர் ராமு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கைது செய்யக்கோரி புதுச்சேரி – கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை விசாரணைக்காக பள்ளியில் இருந்து போலீசார் காவல்நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, ஆசிரியரை பொதுமக்களும், உறவினர்களும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான செல்வம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், டிஐஜி சத்திய சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிய செய்யப்பட்டு, பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார். எனினும் பள்ளியின் நிறுவனர் ராமுவை கைது செய்யும்வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என சிறுமியின் உறவினர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளியில் நாளை (15.02.2025) நடைபெறுவதாக இருந்த செய்முறை தேர்வுகள் (Practical Exams) அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.