ஆரோவில்லில் களைகட்டிய மாரத்தான்: வெளிநாட்டினர் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

மக்கள் ஒற்றுமை, உடல் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் பங்கேற்று உற்ச்சாகத்துடன் ஓடினர்.

மக்கள் ஒற்றுமை, உடல் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் புதுச்சேரி அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 15 ஆவது ஆண்டு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள், முதியவர், சிறியவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். 42 கி.மீ. தூரம் நடைபெற்ற மாரத்தானை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

மேலும் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சோர்வடையாமல் இருக்க வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் ஆங்காங்கே பல்வேறு இசைகளை இசைத்து மாரத்தான் ஓடியவர்களுக்கு உற்சாகம் அளித்தனர். முழு மாரத்தானில் 103 பேரும், அரை மாரத்தானில் 999 பேரும், பத்து கிலோமீட்டர் ஓட்டத்தில் பத்து பார்வையற்றோர் உட்பட 1521 பேரும் பங்கேற்றனர். இந்த ஓட்டப்பந்தயத்தை பாதுகாப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி உமாதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.