புதுச்சேரியில் சிறுமி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்: தனியார் பள்ளிக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பு போராட்டத்தால் தவளக்குப்பத்தில் பதற்றம்

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 6-வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில், மூடப்பட்ட தனியார் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், இவ்வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக்கோரியும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுச்சேரி கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளியின் நிறுவனர் தூண்டுதல் பேரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வழக்கை திசை திருப்ப பார்ப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்டியுள்ளனர்.

புதுச்சேரி தானாம்பாளையம் பகுதியில் ராமு என்பவருக்கு சொந்தமான
தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கும் 6- வயது சிறுமியிடம், அதே பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளியில் இருந்த ஆசிரியரை, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் காரணமாக ஆசிரியர் மணிகண்டன் மீது போஸ்கோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனியார் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து சூறையாடப்பட்ட நிலையில், பள்ளியை தற்காலிகமாக சீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்கக்கோரியும், பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக்கோரி 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சீருடையுடன் ஆசிரியர்களுடன் இணைந்து தவளகுப்பம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே பள்ளியின் நிறுவனர் ராமு மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து கைது செய்து, பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூபாய் 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டுமென 18 மீனவ கிராம பஞ்சாயத்தினர் தீர்மானம் நிறைவேற்றி அரசை வலியுறுத்தியுள்ள நிலையில், இன்று பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென பள்ளி நிர்வாகம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் நிறுவனர் ராமு தூண்டதலின்பேரில் போராட்டம் நடத்தி, இந்த வழக்கை திசை திருப்ப பார்ப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி, அவர்களும் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் திரண்டுள்ளதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி துணை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்ற நிலையில், தற்போது தவளக்குப்பம் சந்திப்பில் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும், இவ்விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தவளக்குப்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.