வாயில்லா ஜீவன்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா: புதுச்சேரி சமூக ஆர்வலர் நெகிழ்ச்சி

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜ். இவர் விலங்குகளை பாதுகாக்கும் குரல் அற்றவர்களின் குரல் என்ற தனது தொண்டு நிறுவனம் மூலம், கடந்த 7 வருடங்களுகளாக புதுச்சேரியில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோயால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை எடுத்துச்சென்று சிகிச்சை அளித்து பராமரிப்பு செய்து வருகிறார்.

இவரது சேவையை அறிந்த நடிகர் பாலா, தன்னை யார் என அறிமுகம் செய்துகொள்ளாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அசோக்ராஜை செல்போனில் அழைத்து சந்திக்க வேண்டும் என்றும், உங்களால் காப்பாற்றி பராமரிக்கபடும் விலங்குகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென புதுச்சேரி வந்த நடிகர் பாலா, அசோக்ராஜை சந்தித்துள்ளார். அப்போது பாலா, விலங்குகளுக்கு நீங்கள் அளிக்கும் சேவையை கேள்விபட்டேன். பல இன்னல்கள், வேதனைகளுடன் பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையே தியாகம் செய்து வரும் உங்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்தேன் என கூறி விலங்குகள் அவசர ஊர்தியை அளித்து பாராட்டினார்.
செய்வதறியாது திகைத்த அசோக்ராஜ் ஆம்புலன்ஸ் சாவியை பெற்று கொண்டு, பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அசோக் ராஜ் கூறுகையில்,
பல வருடங்களாக விலங்குகளுக்கு உதவி செய்து வருவதாகவும், புழு பிடித்த, நாற்றம் வரும் நாய்களை இருசக்கர வாகனத்தில் மருத்துவ உதவிக்கு எடுத்து சென்றதாகவும், புதுச்சேரியில் சிகிச்சை பெற முடியாத நாய்களை, சென்னைக்கு, வாடகை வண்டியில் எடுத்து சென்றேன் என்றும், இப்போது நடிகர் பாலா என்னுடைய சேவையை அங்கீகரித்து வழங்கிய ஆம்புலன்ஸ் மூலம், வாய்யில்லா ஜீவன்களுக்கான என்னுடைய சேவை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். வாய்யில்லா ஜீவன்களுக்காக தன்னுடைய வாழ்க்கையே அற்பணித்துள்ள அசோக் ராஜ் அவர்களின் சேவையை நாமும் பாராட்டுவோம்.