புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் தங்களது அலுவலகத்தில் டீ, காபி செலவு, பூங்கொத்து, எரிபொருள் செலவுகள் அவ்வப்போது பேசுபொருளாக மாறும். உதாரணத்திற்கு புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 561 செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்கள் தரப்பட்டிருந்தன. இதனால் மக்கள் வரிப்பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக அவ்வப்போது விமர்சனங்களும் எழும்.
இந்நிலையில் குயவர்பாளையத்தை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை அலுவலக டீ, காபி மற்றும் பூங்கொத்து வாங்கிய செலவுகள், கார் பயன்பாடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை அலுவலக பொதுதகவல் அதிகாரியான அமுதன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள் என்றும், அமைச்சர்களின் அலுவலகத்தில் தலா 14 பேர் பணிபுரிகிறார்கள். உள்துறை அமைச்சர் அலுவலக காபி, டீ செலவாக ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 635-ம், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 421-ம், வேளாண்துறை அமைச்சருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயிரத்து 320-ம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 39ம் என மொத்தம் 28 லட்சத்து 27 ஆயிரத்து 815 செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல் பூங்கொத்து வாங்கிய வகையில், உள்துறை அமைச்சருக்கு 5.22 லட்சத்து 31 ஆயிரமும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்து 955-ம், முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 700-ம், இந்நாள் குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு ரூ.1 லட்சத்து 400-ம் என மொத்தமாக ரூ. 41 லட்சத்து 41 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை எரிபொரு எரிபொருள் தேவைக்கு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.