விஜய்யுடன் கூட்டணி சேரும் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி.!! மகிழ்ச்சியில தமிழக வெற்றி கழகத்தினர்…

நடிகர் விஜய் தனக்கு நண்பர் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த சூழ்நிலையை பொருத்து தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா கடந்த 7-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி முன்னிலையில் திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள அப்பா பைத்தியசுவாமி கோவிலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டை அணிவித்து முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கும்போது தமிழகத்திலும் கட்சித் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் நிறையபேர் வந்து தமிழகத்தில் கட்சி துவக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு நான் எதுவும் சொல்லாமல் அந்நேரத்தில் புதுச்சேரியில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தோம்.

தொடர்ந்து தமிழகத்திலும் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சி வர வேண்டுமென சில நண்பர்கள் விரும்பினார்கள். சில மக்கள் தமிழகத்திற்கு எப்போது வருவீர்கள்? என்று என்னிடம் கேட்பார்கள். அதனால் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் சார்பில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து கட்சி ஆண்டு விழாவில் இதுகுறித்து தெரிவித்தேன்.

அதன்பேரில் வேலூரில் இருந்து பரத் என்பவர் தற்போது என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்னும் தமிழக பல்வேறு மாவட்டங்களில் இருந்து என். ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய் என் நண்பர், எனக்கு வேண்டியவர். அவரிடம் பேசுவேன், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தேர்தல் சமயத்தில் சூழல் எப்படி அமைகிறதோ அப்போது தமிழகத்தில் கூட்டணி யாருடன் என்பது பற்றி அலோசிக்கப்படும் என தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் இந்த கருத்து தமிழக வெற்றி கழகத்தினர் மகிழ்ச்சியடை செய்துள்ளது.