புதுச்சேரியில் அடமானம் வைத்த நகையை ஏமாற்ற நினைத்த கூட்டுறவு வங்கி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற புகார்தாரிடம், ஜிபே மூலம் பணம் வசூல் செய்ததோடு விலை உயர்ந்த ஷீ உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கேட்டு பெற்ற சிறப்பு துணை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் டி.ஐ.ஜி சத்திய சுந்தரத்திடம் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் மாதந்தோறும் காவல்துறை சார்பில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் தனது தாயார் இந்திரா பெயரில் 8 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளார். 3 மாதம் கழித்து அந்த நகையை மீட்பதற்கு சென்றபோது நகை திருடு போய்விட்டது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஆத்திரமடைந்த பாபு, கூட்டுறவு வங்கி நிர்வாகத்திடம் ஆவேசமாக கேட்டதாகவும், அதற்கு வங்கி தரப்பில் இரண்டு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால் இரண்டு வருட காலம் ஆகியும் நகையை திருப்பி தராததால், கடந்த டிசம்பர் மாதம் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பாபு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறை தரப்பில் அதனை விசாரிக்க விசாரணை அதிகாரியாக சிறப்பு துணை ஆய்வாளர் சுப்பிரமணி என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்க, தனது வண்டிக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு 10 ம் நம்பர் ஷூ வாங்க 1,800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெட்ரோலுக்கு 500ம், ஷூ வாங்கவும் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணிக்கு கூகுள்பே மூலம் 1,500 ரூபாயை பாபு அனுப்பியதாக கூறப்படுகிறது.
புகார் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யும் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்க பாபு நேற்று முன்தினம் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார்தாரர் புகார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். சுப்ரமணி பணம் கேட்ட ஆடியோ, கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி லஞ்சம் வாங்கியது உண்மையா என விசாரணை நடந்து வருகிறது.