தான் ஒப்புதல் கொடுத்தால்கூட அரசு துறைகளில் பணிகள் நடைபெறுவதில்லை: முதலமைச்சர் ரங்கசாமி வேதனை.!!

புதுச்சேரியில் துணைநிலை ளுநர் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ள நிலையில், அதனை இயக்க வல்லுனர்கள் இல்லை, அதேபோல் சுகாதாரத்துறை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்பது தனக்கு பெரிய குறையாக உள்ளதாகவும், பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் தான் ஒப்புதல் அளித்த போதிலும் நிர்வாகத்திற்கு என்ன குறை என தெரிவியவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பில் ‘மாபெரும் சுகாதாரத் திருவிழா’ என்கிற நிகழ்ச்சி புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் இன்று‌ (பிப்ரவரி 28) தொடங்கி வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த சுகாதார திருவிழாவில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனைகள், நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், இரத்த பரிசோதனைகள், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் உள்ளிட்ட பல நோய்களுக்கு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் செல்வம், அமைச்சர் சரவணன் குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், துறை செயலர், இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வளர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அதே போல் உணவு மற்றும் ஆயுஷ்மான், சித்தா உள்ளிட்டவைகள் தொடர்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை துணை நிலை ஆளுநர் திறந்து வைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, எளிதாக மருத்துவ வசதி நம் மாநிலத்தில் கொடுத்து வருகிறோம். எல்லா கிரமங்களிலும் குறைந்த மக்கள் தொகையிலும் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் வைத்துள்ளோம். இந்திய அளவில் மருத்துவ குறியீட்டில் நம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் இந்த மருத்துவ வசதிகள் போதுமா என்றால் போதாது. இன்னும் சிறப்புப் மருத்துவ வசதிகள் தேவைப்படுகிறது. சென்னைக்கு சென்று சிறப்பு மருத்துவம் பெறமால் நம் மாநில மக்கள் இங்கயே சிறப்பு மருத்துவம் செய்யும் நிலை வர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு ஒரு பெரிய குறை உள்ளது. அது என்னவென்றால் அரசு மருத்துவமனைகளுக்கு எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இயந்திரங்களை இயக்க தேவையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. அதற்கான பணியிடங்கள் நிரப்பபடவில்லை. நிர்வாகத்தில் இது ஒரு பெரிய குறை.

சுகாதாரதுறையில் பணியிடங்களை நிரப்பபட வேண்டும். இதுதொடர்பான கோப்புகளை சுத்திவிட்டு காரணம் கூற கூடாது. சுகாதாரத்துறையில் விரைவாக பணியிடங்களை நிரப்பினால், புதுச்சேரி சுகாதாரதுறையை எந்த குறையும் சொல்ல முடியாது. நீண்ட நாட்களாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்தால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக தொடர்ந்து பணியாற்றுவர்கள். இல்லையென்றால் கூடுதல் ஊதியம் கிடைக்கும் வேறு மருத்துவமனைக்கு சென்றுவிடுவார்கள். இதில் எல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சங்கடங்கள் நிர்வாகத்தில் உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நாம் நிரப்பிதான் ஆக வேண்டும். 500 செவிலியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் 150 பேர் தான் உள்ளனர். அவர்கள் எப்படி பணி செய்ய முடியும்? இத்துறையின் அமைச்சராக இருக்கும் நானே இதை சங்கடத்துடன் தெரிவிக்கிறேன். முதலமைச்சர், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நானே பணியிடங்கள் நிறப்ப அனுமதி அளிக்கும்போது நிர்வாகத்தில் ஏன் இந்த குறை என தெரியவில்லை என முதலமைச்சர் வேதனை தெரிவித்தார்.