புதுச்சேரியில் பால் உற்பத்தி குறைவாக உள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறையில் காலியாக இருந்த இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு இளநிலை கூட்டுறவு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பாண்லே நிறுவனத்தில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளையும் வழங்கினார். பின்னர், புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக் கிளைகளின் மூலம் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 70 மகளிருக்கு ரூ.83.50 இலட்சம் அளவிற்கு கடனுதவியையும் சிறந்த வங்கிக் கிளைகளுக்கு விருதுகளையும் வழங்கிய முதலமைச்சர் புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இரண்டு புதிய ஐஸ்கிரீம் வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,புதுச்சேரியில் பால் உற்பத்தி குறைவாக உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படுவதால் வெளி மாநிலத்திலிருந்து பால் வாங்கும் சூழல் ஏற்படுவதாக தெரிவித்த அவர்
புதுச்சேரியில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார்.