புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணைவேந்தராக பேராசிரியர் பானிதி பிரகாஷ் பாபு நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

குடியரசு தலைவர் உத்தரவுபடி, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வரும், பானிதி பிரகாஷ் பாபுவை நியமித்து மத்திய உயர்கல்வித்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் தரணிக்கரசு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாகவும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை மற்றும் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்படுவதால் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் உத்தரவுபடி,
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்ப துறையின் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வரும், பானிதி பிரகாஷ் பாபுவை நியமித்து மத்திய உயர்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.