புதுச்சேரி மக்கள் இனி ஒருமுறை ஜாதி சான்றிதழ் எடுத்தால் போதும் – வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்: முதல்வர் ரங்கசாமியின் அசத்தலான அறிவிப்பு.!

புதுச்சேரி மக்களுக்கு நிரந்தர ஜாதி சான்றிதழ் மற்றும் மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளியிலையே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 5-வது நாளான இன்று பேரவையில் ஜாதிச் சான்றித தொடர்பான அறிவிப்பினை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அதில்,
புதுச்சேரி மக்களுக்காக நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் (Permanent Certificate of Caste Scheme) வெற்றிகரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

அரசு நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கி, மக்களுக்கு சேவைகளை வழங்குவதை உறுதியாகக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய முறையில், ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் அவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இதனால் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வருவது தவிர்க்கப்படும். அதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் நீக்கப்படும்.

மேலும், பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் பள்ளிகளிலேயே இந்த நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அரசு அலுவலகங்களுக்கு தேவையில்லாமல் செல்வதைத் தவிர்க்கலாம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.