புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி முடித்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது துறைகள் தொடர்பாக பதிலளித்து பேசியதாவது: புதுச்சேரி பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும். இந்தாண்டு தலைமை காவல்துறை அலுவலகம் புனரமைக்கப்படும்.
புதுச்சேரி காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறையினருக்கு சைபர் குற்றம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

பள்ளிக்கல்வி துறை குறித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம்:
நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பத்துள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும்.

அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து , மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மாலை நேரங்களில் சிற்றுண்டி திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது.

புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் இயக்கப்படும் என்றார்.