புதுச்சேரியில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறைதண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு 41 வயதுடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர். புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார். இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து இன்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, மிக குறுகிய காலத்துக்குள்ளே சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.