புதுச்சேரி பொதுப்பணித்துறையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு லஞ்சம் வாங்கியபோது, சிபிஐ அதிகாரிகளால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தி அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய மூவரை காரைக்காலில் சி.பி.ஐ., சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 75 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரும் நீதிமன்ற காவலில் காரைக்கால் கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகக்கோரியும் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக, காந்தி வீதி – நேரு வீதி சந்திப்பில் இருந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் வீடு அமைந்துள்ள பெருமாள் கோயில் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது
பேரணியாக வந்தவர்களை அரபிந்தோ வீதி அருகே தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலையிலேயே அமர்ந்து அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், அமைச்சர் பதவி விலகக்கோரியும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டுமல்லாமல், இந்த ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஊழல் புரிந்துள்ளதாகவும், அவர்களிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.