புதுச்சேரியில் மது போதையில் இருந்த வாலிபரிடம், தனக்கும் மது வாங்கி கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி பெண் ஒருவர், விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் மது போதையில் மயங்கியபோது அவர் அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 5 சவரன் தங்க செயின், மோதிரம் மற்றும் ஐ போஃன் உள்ளிட்டவகளை திருடிச்சென்ற பெண்னை சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (27). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி அரியாங்குப்பம் டோல்கேட் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது அம்மாவை தவளக்குப்பம் பகுதியில் உள்ள கண் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாகவும், தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், மது வாங்கி கொடுத்தால் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் மதுபானம் வாங்கி கொண்டு, அந்த பெண்ணுடன் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜே.வி.எஸ் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று அறை எடுத்து, இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் பிரகாஷ்ராஜ் மதுபோதையில் மயங்கியபோது, அப்பெண் அவர் அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான செயின், பிரேஸ்லெட், மோதிரம் என 5 சவரன் நகைகள் மற்றும் ஐபோனை திருடிகொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பிரகாஷ்ராஜ் கண் விழித்து பார்த்தபோது அவரது நகைகள் மற்றும் செல்போஃன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது நகைகளை திருடிச்சென்றது ஜெயகொண்டம் சிலம்பூரை சேர்ந்த பாஞ்சாலி (எ) கலையரசி என்பது தெரியவர, அவரை கைது செய்த போலீசார், புதுச்சேரி அழைத்து வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் இதேபோல் நகைகள் அணிந்து வரும் ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி மது அருந்தி உல்லாசமாக இருந்து, அவர்களுக்கு போதை ஏறி மயக்க நிலையில் இருக்கும்போது, பணம் நகைகளை பறித்து சென்று, அதனை விற்று ஜெயங்கொண்டத்தில் புதிதாக வீடு கட்டி வந்ததும், இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதுபோன்று இரண்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை நாளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி அவர் விற்பனை செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்ய உள்ளனர்.