புதுச்சேரி பேருந்துநிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த வாலிபரை கைது செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார், அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மூன்று நாட்களாக போலீசார் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் அங்கும், இங்கும் இருட்டில் சுற்றி திரிவதை கண்ட போலீசார், அவரை பிடிக்க சென்றபோது போலீசாரை கண்டு அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றதில் அருகே இருந்த வாய்காலில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து விசாரணை செய்ததில், அவர் புதுச்சேரி ஜி.என் பாளையத்தை சேர்ந்த சித்தானந்தம் (20) என்பதும், விற்பனைக்காக கையிருப்பில் 1 கிலோ கஞ்சாவும், அவர் வீட்டை சோதனை செய்ததில் அங்கு ஒரு 3 கிலோ என நான்கு கிலோ கஞ்சா கண்டுப்பிடிக்கப்பட்டு போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சித்தானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் சித்தானந்தம் மீது காலாப்பட்டு பல்கலைக்கழக பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.