புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை திருக்கோவிலில், வசந்த நவராத்திரியை முன்னிட்டு பெண் குழந்தைகளை வழிபடும் கன்யா பூஜையில் 108 குழந்தைகள் பங்கேற்று யோக மாயா லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வசந்த நவராத்திரி என்கிற லலிதா நவராத்திரி கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, தினந்தோறும் ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று ஶ்ரீ யோகமாயா லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் , கலச நீர் என பல்வேறு திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு வருகின்றது.
வசந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் நடைபெற்ற கன்யா பூஜையில் 108 பெண் குழந்தைகள் கலந்துகொண்டனர். ஒன்பது பெண் தெய்வங்களின் அம்சங்களாக உடையணிந்து, சடங்கு ரீதியாக பாதங்களைக் கழுவி வழிபட்டு பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடை போன்ற பிரசாதங்களை வழங்கி கோவில் சார்பில் வழிபட்டனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.