புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது இருசக்கர வாகனம் சூரமங்கலத்தில் திருடுபோனது குறித்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கரியமாணிக்கம் முதல் திருவக்கரை பகுதி வரையில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில்
சூரமங்கலத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் திருவக்கரை, பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சரண் என்பவரது ஒர்க்ஷாப்பில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில், இருசக்கர வாகனத்தை திருடியது தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கொடுக்கூரைச் சேர்ந்த பானுபிரசாத் (20), எறையூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (20), விஜயகுமார் (27) என்பது தெரியவந்தததையடுத்து நெட்டப்பாக்கம் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சூரமங்கலத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் சேர்த்து ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 6 திருட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த இருவர் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி யாராவது பார்க்கிறார்களா? என கூலாக நோட்டமிட்டு சட்டென அருகில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.