புதுச்சேரி அரசின் கூட்டுறவு வங்கி ஏடிஎம்மில் தமிழ்மொழி புறக்கணிப்பு.! ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் உள்ள மாநில அரசின் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி‌ அடைந்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள தொடு திரைகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே பயன்பாட்டு மொழிகளாக உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் உள்ள, புதுச்சேரி அரசின் புதுச்சேரி மாநில‌ கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏடிஎம் இயந்திர தொடுதிரையில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாகவே இந்த ஏடிஎம் மையத்தில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்றும், அவசர தேவைக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தோம். ஆனால், ஏடிஎம் தொடுதிரையில் தமிழ் மொழிக்கு பதிலாக வேறு மொழிகள் இடம் பெற்றிருந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். இதனால், தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.