புதுச்சேரி விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதலமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவபடிப்பும், மருத்துவ சிகிச்சையும் நன்றாகவே இருக்கிறது. இங்கு பிளாஸ்டிக் சர்ஜரிகள் சிறப்பாக செய்கின்றனர். எனது கோரிக்கையை ஏற்று தற்போது நல்ல அமைப்புடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக கட்டியுள்ளனர். புதிய தொழில்நுட்பங்கள் மருத்துவத்தில் உள்ளது. அந்த தொழில்நுட்பங்கள் இங்கு கொண்டு வந்து புதிய விதமான மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும். எங்களது அரசு உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் என பேசினார்.