புதுச்சேரியில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற போதை வாலிபர்கள்.! விரல்கள் துண்டான நிலையில் உயிர்பிழைப்பு…

புதுச்சேரியில் ரெஸ்ட்டோ பாரில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வெளியேற்றிய பவுன்சர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்த நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன் (22). இவர் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோ பாரில் பவுன்சராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு ரெஸ்ட்ரோ பாரில் 5 நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த வசந்தராமன் உள்ளிட்ட சில பவுன்சர்கள் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பியுள்ளனர். பின்னர் நள்ளிரவு வசந்தராமன் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பெருமாள் கோயில் வீதி வழியாக வீடு திரும்பியபோது, அவரது பின்னால் கார் ஒன்று அதிக வேகத்துடன் வந்து மோதியுள்ளது. இதில் வசந்தராமன் தூக்கி வீசிப்பட்டு படுகாயமடைந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த கும்பல் மீண்டும் ரிவர்ஸ் எடுத்து வந்து வசந்தராமனை பார்த்து முறைத்துவிட்டு சென்றுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த வசந்தராமன் இச்சம்பவம் குறித்து பார் மேலாளரிடம் தெரிவித்ததையடுத்து, உடனே அவரது சக ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்க்கு வந்து, வசந்தராமனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் காயமடைந்த வசந்தராமனின் காலில் இரண்டு விரல்களும் கடுமையாக சேதமடைந்ததால், அவற்றை ஆபரேஷன் மூலம் அகற்றிவிட்டனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வசந்தராமன் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்திய கார் ரெஸ்டோபாரில் தகராறில் ஈடுபட்டவர்களின் கார் எனவும், மது போதையில் தகராறில் ஈடுபட்டபோது தடுத்து நிறுத்தியதோடு அவர்களை வெளியேற்றியதால் கோபமடைந்த கும்பல் பவுன்சர் வசந்தராமன் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்ததையடுத்து, விபத்து வழக்கை கொலை முயற்சி வழக்காக பெரிய கடை போலீசார் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.