புதுச்சேரியில் ஒரே ஆம்புலன்ஸில் 10 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவலம்.! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

புதுச்சேரியில் 10 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் பெண்களை ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி பகுதியில் அரசின் ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் பரிசோதனை சிகிச்சைபெற்று செல்வது வழக்கம்.


இந்நிலையில் இந்த மருத்துவமனையில் ஈசிஜி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகள் 10 க்கும் மேற்பட்டோரை ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் அடைத்து சட்டப்பேரவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரே வாகனத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை அழைத்து செல்வதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.