புனித வெள்ளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும், அந்த நாட்களை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாகக் கடைபிடிக்கின்றார்கள். மேலும் இந்த தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து இந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிறிஸ்துவர்கள் நினைவு கூறுகின்றனர்.
இன்று புனித வெள்ளியையோட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்ஸ்சிஸ் காலிஸ்ட் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் ஏசுபிரான் புகழ் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஏசு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்துவர்கள் கொண்டாட உள்ளனர்.