ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள் எனுவும் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என காவல்துறை அச்சம்.
காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஸ்ரீநகர் சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை
வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், கொடூர செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், தப்ப விடமாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, இன்னும் வலுவடையும் என பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது, உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.