புதுச்சேரியில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து, ஆபாசமாக சித்தரித்து இணையத்தளத்தில் பதிவிட்டு யூ.பி.ஐ மற்றும் க்யூஆர் கோடு மூலம் பணம் பறித்த தென்காசி இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்தது, தென்காசி மாவட்டம், வீரசிகாமணி பகுதியைச்சேர்ந்த மனோகரர் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தென்காசிக்கு சென்று, மனோகரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரியைச் சேர்ந்த புகார்தாரரின் மனைவி உட்பட சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களின் புகைப்படங்களை திருடி மார்பிங்கில் தவறாக சித்தரித்து இணையத்தளத்தில் பதிவிட்டு, அதில் பாலியல் சேவை உள்ளதாககுறிப்பிட்டு யூபிஐ, க்யூஆர் கோடு மூலம் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து புகைப்படத்தை மார்பிங் செய்ய பயன்படுத்திய கணினி, மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் இவ்வழக்கில் சந்தோஷ் மற்றும் ஜெயா ஜெகி ஆகிய இரண்டு பேருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் பெண்கள் சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்றும்,
அவர்களுடன் உரையாடுவதையும், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.