புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத. தொடர்ந்து அங்கு உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றி மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ளது.
புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜிப்மர் மருத்துவமனையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று பகல் 1 மணியளவில் ஜிப்மர் நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு மர்ம நபர் ஒருவர் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இரண்டாவது முறையாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறைக்கு ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தன்வந்திரி நகர் காவல்நிலைய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் பல்வேறு பிரிவுகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல் மருத்துவமனைக்குள் வாகனங்கள் அனுமதிக்காமல், நோயாளிகளின் உறவினர்கள் உள்ளே அனுமதிக்காமல் இருந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாகவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம், தீயணைப்பு நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்மர் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில், யார் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் க்ரைம் போலீசார் திணறி வருகின்றனர்.