புதுச்சேரியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடமிருந்து மாநில அந்தஸ்து பெற்றுத்தற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புதுச்சேரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் 16 முறை ஒருமனதாக தீர்மானங்களை தொடர்ந்து நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வருவதையும், தங்கள் தலைமையில் தற்போது நடந்து வரும் 15–வது சட்டப்பேரவையில் இரண்டு முறை அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். முதல் தீர்மானத்தில் பேசிய தாங்கள் சக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று மாண்புமிகு மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்தை பெற்று வருவோம் என்று உறுதியளித்தீர்கள். மாநில அந்தஸ்து பெறுவதுதான் அரசின் உயிர்க்கொள்கை என்றும் கூறிய தாங்கள் அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் ஆவளுடன் காத்துக்கிடந்தோம். ஆனால் அன்றைய பாஜக ஆளுநர் அந்த தீர்மானத்தை டெல்லிக்கே அனுப்பாமல் கிடப்பில் போட்டார். பின்னர் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின் ஓராண்டு காலத்திற்கு பிறகு மத்திய அரசுக்கு அத்தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அனுப்பிய தீர்மானத்தை எவ்வித ஆய்வும் செய்யாமலே ஒற்றை வரியில் புதுச்சேரிக்கு இதே நிலை போதும் என்றும் மாநில தகுதி வழங்க முடியாது என்றும் அறிவிப்பு செய்து புதுச்சேரி மக்களின் மனங்களை புண்படுத்தியது.
இருப்பினும் இரண்டாண்டு கழித்து எங்களது விடா முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக அத்தீர்மானம் உங்கள் தலைமையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்பொழுதும் தாங்கள் அதே உத்திரவாதத்தை முன்வைத்துள்ளீர்கள். சில நாட்களுக்கு முன்பு கூட மேதகு ஆளுநர் அவர்கள் மத்திய அரசை அணுகி மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தரப் போகிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் அதுபற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.
தாங்களும் அதுபற்றி வாய்திறக்கத் தயங்குகிறீர்கள். சட்டப்பேரவைத் தலைவரோ மேதகு ஆளுநர் மிகத் திறமையானவர். மாநிலத்தின் மீது பற்றுள்ளவர். எல்லாவற்றையும் நிறைவேற்றி வருகிறார் என்றார். ஆனால் பேரவைத் தலைவரால் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் பற்றி மட்டும் வாய்திறக்க மறுக்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இயங்கும் பல்வேறு குழுக்களில் உறுதிமொழிக்குழுவும் ஒன்று. பேரவையில் அரசு சார்பில் அறிவிக்கப்படும் உறுதிகளின் நிறைவேற்றம்பற்றி அக்குழு விவாதித்து உத்தரவு பிறப்பிக்கும். அதில் இதுபற்றி விளக்கம் கேட்கலாம் என்றால் அந்த குழு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. சட்டப்பேரவை மக்களுக்கான உறுதிமொழியில் எந்தளவிற்கு அக்கறை கொண்டுள்ளது என்பதை மாண்புமிகு முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, நமது கோரிக்கை ஒன்றுதான். இந்த அரசிடம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் நிலை என்ன?. ஆளுநர் அத்தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளாரா?. அப்படி அனுப்பி இருந்தால் மத்திய அரசு அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது பற்றி புதுச்சேரி மக்களுக்கு முதல்வர் அவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாடு சார்பில் ஆளுநர் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்ற வழக்கில் முழு மாநில ஆளுநரின் அதிகாரம் அம்மாநில சட்டமன்றத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதுபோன்ற அதிகாரம்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்றங்களுக்கும் வேண்டும் என்பது ஜனநாயக மரவு.
ஆனால் புதுச்சேரியில் 1963–ஆம் சட்டப்படி (The Rules of Business of the Government of Pondicherry) சட்டமன்றம் – அமைச்சரவை மக்களால் தேர்வு செய்யப்பட்டும் துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் தான் அதிகபட்ச அதிகாரம் என்றும், எந்த சட்டத்திற்கும் அல்லது நிதி ஒதுக்கீட்டிற்கும் மத்திய அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம் என்பதும், நிர்வாகம் முழுக்க துணைநிலை ஆளுநர் வசம் ஒப்படைக்கப்பட்டு மக்களாட்சி மாண்புகள் சிதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் சட்டமன்றம் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் தொடர்பாக 1993–ல் வெளிவந்த யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தில் மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் புதுச்சேரிக்கு இல்லை. குறிப்பாக 1991–ல் டெல்லி NCT அரசு சட்டத்தில் டெல்லிக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகபட்ச அதிகாரங்கள் கூட புதுச்சேரிக்கு இல்லை என்பது கண்கூடு. இன்றைய வளர்ந்துவரும் நவீன சூழலில் 1963–ஆம் ஆண்டு சட்டம் பொருந்துவதில்லை என்றும் அச்சட்டத்தை தற்காலிக சூழலுக்கு ஏற்ப மாற்றுவது அவசியம் என்றும் கருத்து நிலவிவரும் நிலையில் அதில் மாற்றத்தைக் கொண்டு வர அரசு முடிவு செய்து ஒரு குழு அமைத்ததாக தெரிகிறது. அப்படி அமைக்கப்பட்ட குழுவில் வெறும் அரசு அதிகாரிகளே பங்கு பெற்றுள்ளனரே தவிர மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்பதும் இதுவே ஜனநாயக மரவை புறக்கணிப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1956–ல் இந்திய அரசுக்கும் – பிரெஞ்சு அரசுக்கும் இடையில் ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தப்படி புதுச்சேரிக்கான எவ்வித வளர்ச்சிச் சட்டமும் அம்மக்களின் விருப்பப்படி அமைய வேண்டும் என்றும், புதுச்சேரி மக்களின் ஜனநயாக உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே, இம்மண்ணின் மக்கள் அனைவரின் உணர்வும் மாநில அந்தஸ்து கோரிக்கையில் பிரதிபளிக்கிறது.
இன்று உலக நாடுகள் மட்டுமின்றி இந்திய நாடும் செயற்கை நுண்ணறிவு அறிவியலை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கின்றது. மாண்புமிகு பாரத பிரதமரும் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவில் இதுபற்றி கேள்வி எழுப்பினால் இன்றைய ஜனநாயக போக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான பின்னடைவை சுட்டிக்காட்டி இங்கு வளர்ச்சி ஏற்படவும், மக்கள் மேம்பாடு அடையவும் இங்குள்ள சட்டப்பேரவைக்கும் – அமைச்சரவைக்கும் அதிகாரம் அளிக்கப்படுவது அவசியம் என்று பதில் வருகிறது. அதனை தங்களின் மேலான பார்வைக்கு இத்துடன் இணைக்கிறோம்.
அகவே, இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வர் பொறுப்பிலும், மிகுந்த அனுபவமும் கொண்ட தாங்கள் இதில் அதிக கவனம் செலுத்தி கடந்த காலங்களில் பெற்றுத்தர முடியாத மாநில அந்தஸ்து தகுதியை தாங்கள் பெற்றுத்தந்து புதுச்சேரி மண்ணின் மக்களை, ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா,
மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் ஆட்சி முடியும் தருவாயிலும் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இனியும் பாஜகவுடன் தொடர வேண்டுமா? என முதலமைச்சர் ரங்கசாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பின்போது திமுக
பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.