புதுச்சேரி, மே 9:
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் நிலவி வரும் அவசர நிலையை முன்னிட்டு, அனைத்து மாநிலங்களும் மற்றும் மாவட்டங்களும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், புதுச்சேரி மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 24×7 அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை:
112, 1077, 1070, 0413-2253407, 0413-2251004,
வாட்ஸ்அப் எண்: 9488981070
எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொய்யான அல்லது தவறான தகவல்களை பரப்பக் கூடாது என்றும், இதனை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 54ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வான்வழி தாக்குதல் ஏற்பட்டால், பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
பாதுகாப்பான அறை (குளியலறை போன்றது) தேர்ந்தெடுத்து புகலிடமாக பயன்படுத்த வேண்டும்.
ஜன்னல்களுக்கு பிளாஸ்டிக் சீட் அல்லது காகிதம் ஒட்டி கண்ணாடி சிதறுவதைத் தவிர்க்கலாம்.
புத்தகங்கள், மெத்தைகள் போன்றவற்றால் தற்காலிகமாக பாதுகாப்பு அமைக்கலாம்.
தரையில் சாய்ந்து, தலைக்கு மேல் கைகளை வைத்து, வாயைச் சிறிது திறந்தவாறு இருக்க வேண்டும்.
போதிய அளவில் உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீரை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
அரசு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
செய்யக்கூடாதவை:
வான்வழி தாக்குதலை பார்க்க வெளியே வரக்கூடாது. ஜன்னல்களுக்கு அருகில் தஞ்சம் அடையக் கூடாது. சுவர்களுக்கு சாயக் கூடாது. பயம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். தாக்குதலை எதிர்க்க முயற்சிக்க வேண்டாம், பாதுகாப்புப் படைகள் அதைப் கவனிக்கும். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை வீடு விட்டு வெளியே வர வேண்டாம்.
இவ்வகையிலும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை தவிர்க்காமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குசலாத்துங்கன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.