காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார பணிகளை முடுக்கி விடும் வகையில், அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அவசரகால நடவடிக்கையாக, விடுப்பில் உள்ள மருத்துவ ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்பையில் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் விடுப்பில் உள்ள ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி விடுப்பில் உள்ள அனைவரும் 13-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நெகி தலைமையில் அவசரக் கூட்டம்:
நாட்டின் தற்போதைய அவசரநிலை மற்றும் தேசிய தயார்நிலையை கருத்தில் கொண்டு, துறை தலைவர்களுடன் ஜிப்மர் இயக்குநர் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. எல்லையில் நிலைமை மோசமாகி, பெரிய அளவிலான தாக்குதல்கள் ஏற்பட்டால், மருத்துவம், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் துறைகளில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் மத்திய அரசால் ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நியமிக்கப்படலாம்.
ஜிப்மர், புதுச்சேரியில் கடல் வழியாக அல்லது ஏவுகணை தாக்குதல் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்காரணமாக, பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களால் அவசரத்துக்கான தயார்நிலை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உத்தரவுபடி, ஜிப்மர் அனைத்து ஊழியர்களின் விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவ உதவியாளர் பணியாளர்களும், இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ், நாடு முழுவதும் எந்த இடத்திலும் பணிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.