போர் இல்லை… அமைதி தான்! இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக நிலவிய பதற்றம் இன்று முக்கிய முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகளும் உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

“இன்று இரவு நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பொது நலனையும் கருத்தில் கொண்டு இந்த சமாதான முடிவை எடுத்துள்ளன. இருநாடுகளுக்கும் வாழ்த்துகள்,” என டிரம்ப் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகள் காரணமாக அமைந்துள்ளன என்றும், இருநாடுகளும் ஒத்துழைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “நிலம், வான், கடல் என அனைத்து தளங்களிலும் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட இந்திய தாக்குதல் மாலை 5 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் டார், “இருநாடுகளும் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், நாட்டின் வான்வெளி தற்போது அனைத்து விமானங்களுக்கும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.