ரூ. 100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி – கோவையில் முக்கிய இயக்குனர் கைது‌‌: நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணை!

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). ராணுவ வீரரான அவர் ஓய்வு பெற்ற பின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை உண்மை என்று நம்பிய அவர், அந்த லிங்கை பின்பற்றி அதில் 10 லட்சம் முதலீடு செய்தார். அது மட்டுமின்றி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 8 பேரை இதில் சேர்த்து அனைவரும் ரூ. 2.5 கோடி அளவில் பணம் முதலீடு செய்யதனர். இந்த நிறுவனமும் கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிகளில் அசோகன் மற்றும் அவருடன் முதலீடு செய்த அவரது நண்பர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அசோகன் கார் வேண்டாம் என கூறி ரூ. 8 லட்சம் பணமாக பெற்று கொண்டுள்ளார்.

தொடர்ந்து சிறிது நாளில் அசோகன் வங்கி கணக்கில் ரூ. 9 கோடி இருப்பது தெரியவந்தது. இதனை அவர் தனது வேறு வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடன் பேசி வந்த எண்ணை தொடர்புகொள்ள முயற்சி செய்த போது எதிர்முனையில் போனை எடுக்கவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யாமற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் உத்தரவின் கீழ், ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சைபர் க்ரைம் போலீசார் கோயம்புத்தூர் விரைந்து சென்று நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த் குமார் (40), தாமோதரன் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து மூவரையும் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் படி இவ்வழக்கில் தொடர்புடைய ஆஸ்பே கிரோப்ட்டோ கரன்ஸி நிறுவன இயக்குனர்களான கோயம்புத்தூரை சேர்ந்த சையது உஸ்மான், சந்தானம், இம்ரான்பாஷா, ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது
காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமைக் காவலர் மணிமொழி தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் பதுங்கியிருந்தபாபு என்கிற சையது உஸ்மானை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஆடி சொகுசு காரை பறிமுதல் செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வரும் நிலையில் அவர்களையும் கைது செய்த பின்பு நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேர் மட்டும் 2.5 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் Hashpe நிறுவனம் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இந்த மோசடியின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும், நாட்டின் 5 மாநிலங்களில் இந்த மோசடி கும்பல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் ஏமாறாமல் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கூறியதாவது:
“கிரிப்டோ முதலீடுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறும் மோசடிகளில் நம்பி பணம் செலுத்த வேண்டாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் புதுச்சேரியில் 70 கோடி ரூபாய் வரை மக்கள் இணைய மோசடிகளில் இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் சைபர் க்ரைம் தொடர்பான புகார் அளிக்க வேண்டிய அவசர எண்கள்:

இலவச ஹெல்ப்லைன் எண்: 1930

அதிகாரப்பூர்வ இணையதளம்: cybercrime.gov.in

தொடர்புக்கு: 0413-2276144 / 9489205246