புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்றும் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வார இறுதிநாளை கொண்டாட புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை தினந்தோறும் வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் அவ்வப்போது வெய்யில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி புதுச்சேரியில் நேற்று இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதலே புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 3 மணிக்கு மேல் புதுச்சேரி நகரப் பகுதியான மறைமலையடிகள் சாலை, கடற்கரை சாலை, புஸ்ஸி வீதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை மற்றும் கிராம பகுதிகளான வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், காலாப்பட்டு, கன்னியகோவில் உள்ளிட்ட கிராப் பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக இன்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வார இறுதிநாளை கொண்டாட புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.