புதுச்சேரியை உளவு பார்த்தாரா அமெரிக்க பெண் மருத்துவர்? சாட்டிலைட் போனுடன் பாஸ்போர்ட் பறிமுதல் – ஏர்போர்ட்டில் பரபரப்பு…

புதுச்சேரி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை எடுத்துச்சென்ற அமெரிக்க பெண் மருத்துவரிடம் இருந்து அதை பறிமுதல் செய்த போலீசார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பகல் 12.30 மணிக்கு ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்த போது பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது வெளிநாட்டு பெண் ஒருவரின் பைகளில் சோதனை நடத்தியபோது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வழங்கினர்.

அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரேச்சல் அனி (வயது 32) என்பதும், அவர் அமெரிக்காவில் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் மே 11ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஒருவரைச் சந்திக்க வந்துள்ளதாகவும் தெரியவந்தது.

புதுச்சேரியில் ஒரு விடுதியில் தங்கி, அதன் பிறகு ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த அவர் கொண்டுசெல்ல முயன்ற சாட்டிலைட் போன் மற்றும் பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரேச்சல் அனி சந்திக்க வந்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசனும் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். அவரிடம் தகவல் பெறப்பட்ட பிறகு, அமெரிக்க பெண் டாக்டரைக் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஒப்படைத்தனர்.

இவ்வேளையில், ரேச்சல் அனி இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், அவரிடமிருந்த சாட்டிலைட் போன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சுற்றியுள்ள கட்டிடங்கள், இருப்பிடங்கள் பற்றிய முழு தகவல்களையும் தரக்கூடியது என்பதால் இது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சாட்டிலைட் போன்கள் தடை செய்யப்பட்டவை எனினும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் அவை புழக்கத்தில் உள்ளன. தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், இந்த போனை இந்தியாவில் கொண்டு வந்திருப்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.