அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை

அரபிக்கடல் கிழக்குப் பகுதியில் மற்றும் தென் கொங்கண் கடற்கரை அருகே இன்று (மே 24) ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது இன்று (மே 24) காலை 5.30 மணிக்கு ரத்னகிரிக்கு வடமேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு கிழக்கே நகர்ந்து, ரத்னகிரி மற்றும் டாபோலி இடையே கொங்கண் கரையை கடந்துசெல்லும் வாய்ப்பு உள்ளதால், மன்னார் வளைகுடா, குமரி மற்றும் தென் தமிழகக் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் மற்றும் அதிகபட்சமாக 55 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, கடலூர், எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் மற்றும் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.