ஆழ் கடலில் சிறுவர்களின் அர்த்தமுள்ள பசுமை பிறந்தநாள் கொண்டாட்டம்! கடலை காப்போம்…

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், கடல் வளத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி 15 அடி ஆழ்கடலில் சிறுவர்கள் கொண்டாடிய‌ பசுமை பிறந்தநாள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிறந்தநாள் என்றாலே கேக், விளையாட்டு, நிறைய பிளாஸ்டிக் பொருட்கள், பட்டாசு சத்தம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சென்னையை சேர்ந்த தாரகை (11) மற்றும் நிஷ்விக் (9) ஆகிய இரண்டு சிறுவர்களின் பிறந்தநாள் வேறு மாதிரி அமைந்துள்ளது. இந்த இரண்டு சிறுவர்களும் அவர்களின் பிறந்தநாளை கடலை பாதுகாக்கும் விழிப்புணர்வுடன் கொண்டாடினர். சென்னை கடற்பகுதியில 15 அடி ஆழத்தில், சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் ஸ்ட்ராஸ், பிளேட்டுகள் மற்றும் பைகள் பயன்படுத்தாமல், மறுபயன்பாடு செய்யக்கூடிய ஸ்டீன்லெஸ் பொருட்களை மட்டும் பயன்படுத்தி, கேக் வெட்டி பசுமை பிறந்தநாளாக கொண்டாடி மகிழ்ந்ததுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் “கடல்களை காப்போம் மற்றும் கடல் உயிர்களை காப்போம்” என்று எழுத்துக்கள் எழுதிய துணிப்பட்டைகளை கடலுக்கு அடியில் வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை அனைவரும் பயன்படுத்துவோம், என்று உறுதிமொழி எடுத்தனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களுக்கு உணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கும் ஒரு நல்ல முயற்சி என அனைவரும் பாராட்டினர்.

இதில் தாரகை என்ற சிறுமி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் டெம்பிள் அட்வன்ச்சர் அரவிந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.