புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதனிடையே கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கியதன், காரணமாக வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடந்து விட்டால், காற்றின் ஈரப்பதம் குறைந்து, குளிர்ந்த வானிலை மாறி வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் செல்லும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கொரோனா தாக்கமும் பரவலாக அதிகரித்து வருகிறது. ஆகையால், பள்ளி திறப்பை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்து ஜூன் 15ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டுமென சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போகுமா? என கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுச்சேரியில் கோடை வெய்யில் தாக்கம் குறைந்துள்ளதால், ஜீன் 2-ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எனவே பள்ளிகள் திறப்பதில்லை எவ்வித மாற்றமில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் ஜீன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
முன்னேற்பாடுகள் தயாா்: இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜீன் 2-ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவா்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருள்களும் மாணவா்களுக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.