திமுக கூட்டணியில் பாமக வந்தால் விசிக ஆதரிக்குமா? – திருமாவளவன் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும், கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் தமிழக முதல்வர் பெற்றுள்ளதாகவும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரின் சகோதரர் நடேசன் (92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல் திருமாவளவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் மூத்த சகோதரர் 92 வது வயதில் காலமாகி விட்டார். அவர் ஆசிரியராக பணியாற்றியவர். அரசியலில் ஆர்வமுள்ளவர். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் சிந்தனைகளில் ஈடுபாடு உடையவர். அவரது மறைவு, மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ரவிக்குமார் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தி்ல அகதிகளாக தங்கியிருந்த ஈழமக்கள் முறைப்படி இந்திய அரசின் அனுமதியோடு தாயகம் திரும்புகிறார்கள். இதற்காக தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தாயகத்திற்கு திரும்பிய சூழ்நிலையில், அங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு, இதில் தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து அல்லது இந்தியாவில் எங்கிருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக அவர்களது இல்லத்திற்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு திமுக பொதுக்குழு இன்று மதுரையில் கூடியிருக்கிறது. இது ஒரு வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த நிகழ்வாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெறக்கூடிய வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாடு முதல்வர். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு திமுக தலைவர் தமிழக முதல்வர் தலைமையில் இயங்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கூட்டணியில் நடிகர் கமலுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ராஜ்சபாவில் அவருக்கு ஒரு இடத்தை திமுக தலைவர் ஒதுக்கி தந்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நம்பகத்தன்மைக்கான அடையாளம் இது. ஆனால் அதிமுக வாக்குறுதி கொடுத்ததாக தேமுதிகவினர் கூறுகிறார்கள். அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை ஒதுக்காதது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள், சீர்தூக்கி பார்ப்பார்கள் என்றார். 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை இடங்கள் போட்டியிடும், உங்கள் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, அது தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆகிய இரு மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாற்றம் குறித்து திருச்சி பேரணிக்குப்பிறகு மறுசீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும்.

மேலும், அவரிடம், பாமகவில் தந்தை மகன் பதவி மோதலை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பாமகவுக்கு எந்தவிதமான போட்டியும் இல்லை. அதனால் வெற்றி தோல்விக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கள் களம் வேறு, எங்கள் பயணம் வேறு. நாங்கள் பாமகவை போட்டி கட்சியாக ஒருபோதும் நினைக்கவில்லை. திமுக கூட்டணியில் பாமக வந்தால் விசிக ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு, இது ஒரு யூகமான கேள்வி. திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்வி. இந்த கேள்விக்கு, இப்போது எந்த அவசியமும் இல்லை என்று கூறினார்.