மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தம் – உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடனும் முருகன் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழனியை தொடர்ந்து தற்போது மதுரையிலும் முருகன் பக்தர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை பாண்டிகோவிலில் வரும் ஜூன் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, அறுபடை வீடுகளின் கண்காட்சி துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வர சுப்பிரமணியம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முருக பக்தர்கள் மாநாடு அரசியல் சார்பற்றது, அரசியல் உள்நோக்கம் இல்லாதது. ஆன்மீகத்தின் மீதும், முருகன் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் கலந்து கொள்கிற மாநாடு.
அமித்ஷா ஒரு ஆன்மீக அன்பராக மக்களிடத்தில் மாநாட்டை சிறப்பாக நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தமானது. தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது. இதில் எந்த பிளவுவாத நோக்கமும் கிடையாது என தெரிவித்தார்‌.