இந்து முன்னணி சார்பில் வரும் 22-ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாட்டு திடலில் அறுபடை வீடுகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, அங்கு நிறுவப்பட்டுள்ள ஆறுபடை வீடு முருக கடவுளை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
தொடர்ந்து செய்திகளிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தான் ஒரு முருக பக்தனாக தன்னுடைய குலதெய்வமான முருகனை வழிபட வந்திருப்பதாகவும், முருக கடவுள் பழங்காலத்தில் இருந்து தமிழர்களால் வழிபடும் கடவுளாக இருப்பதாகவும், உலகம் எங்கும் தமிழர்கள் முருக வழிபாட்டை கொண்டு சென்று இருப்பதாகவும். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த தான் குஜராத்தில் 45 ஆண்டுகளாக பணியாற்றிய போதும் முருக வழிபாட்டை இன்னும் மறக்கவில்லை என்றும், முருகன் மீது உள்ள பக்தியின் காரணமாக வந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் புதுச்சேரியில் ஆன்மீக சுற்றுலாவை வளர்ப்பதற்கான முயற்சிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் பழமையான கோயில்கள் இருக்கின்றன. சித்தர் பீடங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் இணைத்து ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கே ஆறுபடை வீடுகளை ஒன்றாக வைத்து காட்டி இருக்கிறார்கள். எப்படி செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.