புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ வீட்டில் 15 பவுன் நகை திருட்டு! போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில்‌ பீரோவில் இருந்து மர்ம நபர்கள் 15 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் வீடு‌ நகரின் மையப்பகுதியான முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ளது. வீட்டின் முதல் மாடியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தந்தை கலியபெருமாள் (80) வசித்து வருகிறார். வயதான அவருக்கு வீட்டில் உள்ள டிரைவர்கள் மற்றும் வேலைக்காரர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவரது அறையில் உள்ள பீரோ திறந்து கிடப்பதாக கார் டிரைவர் கூறினார். உடனே அவரது குடும்பத்தினர் அங்குசென்று பார்த்தனர். அப்போது அவர் வெளியே செல்லும்போது அணியும் 15 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீடு முழுவதும் தேடினர். ஆனால் நகை கிடைக்கவில்லை.‌ இதனால் நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான் நகையை திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் மகன் பாலாஜி பெரியகடை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டமன்ற உறுப்பினர் வெங்டேசனின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் இந்த வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் பணியாற்றும் 2 டிரைவர்கள் மற்றும் பணிப்பெண்ணிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.