புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெறும் காதணி விழாவில் பங்கேற்க புதுச்சேரி அரசு காரில் புதுச்சேரி வேளாண்மை துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அவரது உதவியாளர் பிரகாஷ், அமைச்சருக்கு பாதுகாப்பாக வந்த புதுச்சேரி போலீஸ் தயாநிதி, கார் ஓட்டுனர் சிலம்பரசன் ஆகிய நான்கு பேர் புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ளனர். பின்னர் அவர்களை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் ஆலங்குடி வழியாக பேராவூரணிக்கு காதணி விழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் சென்ற கார் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு அடுத்த பூச்சிக்கடை அருகே சென்றபோது, காரை கடந்து சைக்கிளில் ஒரு நபர் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் சிலம்பரசன் காரை திறப்பியபோது, கார் சாலை ஓரமாக இருந்த ரோடு ரோலரின் சக்கரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உட்பட ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். லேசான காயமடைந்த அவர்களை, அங்கிருந்தவர்கள் அவர்கள் மீட்டு, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உட்பட ஐந்து பேரையும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ புதுச்சேரி அமைச்சர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது