தொடர் மக்கள் சேவையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோபால்.! உருளையன்பேட்டை தொகுதியில் பெருகும் ஆதரவு…

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளருமான கோபால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

தான் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறார் கோபால். குறிப்பாக உருளையன்பேட்டை தொகுதியில் ஏற்படக்கூடிய குடிநீர் பிரச்சினை, மின்சாரம், கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினை உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண்பது மட்டுமின்றி, தனது சொந்த செலவிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

அதேபோல் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவது, ஏழை குடும்பத்தில் திருமணத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவது, தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணியில் கோபால் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அவருக்கு தொகுதி மக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் உருளையன்பேட்டை தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், முதல் நபராக கோபால் களத்தில் நின்று, மக்களோடு மக்களாக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் காலண்டர் மற்றும் சர்க்கரை வழங்குவதை
கோபால் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் 2024 ம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்வே பங்களா அரசடி விநாயகர் கோவிலில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா சிவா காலண்டர் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து ரங்கசாமிபிள்ளை தெரு, புஸ்சி வீதி, கந்தப்பா வீதி, பாரதி வீதி, இந்திராகாந்தி நகர், குபேர் வீதி, ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட தொகுதி முழுவதும் பொதுக்குழு உறுப்பினர் கோபால் வீடு, வீடாக சென்று காலண்டர் மற்றும் சர்க்கரை வழங்கி வருகிறார். இந்த பணியில் திமுக தலைமை கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.